November 2024




நடிகரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய், ஹெச்.வினோத் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இதில் பூஜா ஹெக்டே நாயகியாகவும் பாபி தியோல் வில்லனாகவும் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு கடந்த 4-ம் தேதி முதல் நடந்து வருகிறது.

சமீபத்தில் சென்னை பரங்கிமலையில் உள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில் இதன் படப்பிடிப்பு நடந்தது. அப்போது அங்கு நடந்த நிகழ்ச்சியில் பங்குபெறுமாறு அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. கடைசி நேரத்தில் இயக்குநர் ஹெச்.வினோத்துடன் நடிகர் விஜய் கலந்து கொண்டார். அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு ராணுவ அதிகாரிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரைச் சந்தித்து விஜய் உரையாடினார். இது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன.







சென்னை: நேர்மை, கடின உழைப்பு இருந்தால் ஏழை, எளிய மாணவர்களும் சட்டம் படித்து சிறந்த ஆளுமைகளாக முத்திரை பதிக்க முடியும் என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்தார்.

சென்னை தியாகராய நகர் பால மந்திர் காமராஜ் அறக்கட்டளையின் முன்னாள் தலைவரும், உயர் நீதிமன்ற முன்னாள் அரசு தலைமை வழக்கறிஞருமான எஸ்.கோவிந்த் சுவாமிநாதன் நினைவு சட்டக் கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி பாலமந்திர் கலாச்சார மையத்தில் நேற்று நடைபெற்றது. பாலமந்திர் இணை செயலாளர் லீலா நடராஜன் வரவேற்றார். அறக்கட்டளை செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் ஜி.அன்புமணி தலைமை வகித்தார்.

நம்பிக்கை ஏற்படுத்த வேண்டும்: ‘சட்டக் கல்விக்கான தொழில் வாய்ப்பு’ என்ற தலைப்பில் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்பட்ட இந்த நிகழ்வில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அவர் பேசியதாவது:


பொதுவாக, சட்டக்கல்வி என்பது மேல்தட்டு மக்களுக்கானது என்ற எண்ணம் பலரிடம் உள்ளது. இந்த எண்ணம் மாற வேண்டும். ஏழை, எளிய மாணவ, மாணவிகளும் சட்டம் படித்து சிறந்த ஆளுமைகளாக முத்திரை பதிக்க முடியும்.அதற்கு நேர்மையும், கடின உழைப்பும் தேவை. இன்றைய தலைமுறையினர் அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்குகின்றனர். சட்டக் கல்வியால் சாதனை படைத்துள்ள மூத்த வழக்கறிஞர்கள், நீதிபதிகள் அடிக்கடி இதுபோன்ற நிகழ்வுகளில் பங்கேற்று மாணவ, மாணவிகளிடம் நம்பிக்கை ஏற்படுத்த வேண்டும்.

சட்டக் கல்வி என்பது வெறும் தொழில் வாய்ப்பு மட்டுமல்ல. அது சராசரி மனிதனை, சமூகத்துக்கு சேவையாற்றும் மனிதாபிமானம் உள்ள மனிதனாக மாற்றிக் காட்டும். மற்ற துறைகளைவிட, சட்டம் படித்தவர்களுக்கு சமூகத்தில் மதிப்பு, மரியாதையோடு, செல்வமும் கூடுதலாகவே கிடைக்கும். இவ்வாறு அவர் பேசினார்.

பின்னர், குழு விவாதத்தில் அவருடன், மூத்த வழக்கறிஞர்கள் ஸ்ரீராம் பஞ்சு, என்.எல்.ராஜா, சி.மணிசங்கர், டி.மோகன், பி.நடராஜன் ஆகியோரும் பங்கேற்று, மாணவர்களுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர்.

உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் ஜெ.சரவணவேல், திவாகர், விஷால், சுக்ரித் பார்த்தசாரதி, யோகேஷ்வரன், சாருலதா, தன்வீர், அத்வைத், ப்ரணவ், ஷகானா, கார்த்திக், கிருஷ்ணஸ்ரீ உள்ளிட்டோர் பல்வேறு தலைப்புகளில் மாணவர்களுடன் கலந்துரையாடினர். நிகழ்வில் பங்கேற்ற வழக்கறிஞர்களுக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பரிசு வழங்கி பாராட்டினார். நிறைவாக, சுஷ்மிதா நன்றி கூறினார்.




கடல் வெப்ப அலை ஏற்படுவதால் வரும் நாட்களில் புயல்கள் வலிமையாகும் என மத்திய புவி அறிவியல் அமைச்சகம் தெரிவித்துள்ளது. அடுத்த 36 மணி நேரத்தில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.


மத்திய புவி அறிவியல் அமைச்சக செயலாளர் ரவிச்சந்திரன் நிருபர்கள் சந்திப்பில் கூறியதாவது: கடல் வெப்ப அலைகளால் வரும் காலங்களில் புயல்கள் வலிமை பெற்றதாக மாறும். வெப்பம் அதிகரிப்பால் மேகங்கள் நீரை சுமக்கும் திறன் அதிகரிக்கும். காலநிலை மாற்றத்தால் மேகங்களின் பரப்பளவு குறைந்து அதிக நீரைக் கொண்டதாக உருவாகின்றன. 'மரைன் ஹீட் வேவ்' மாதக் கணக்கில் தொடர்கிறது. இதனால் புயல்கள் இனி மிகுந்த வலிமை பெற்றதாக மாறும். இவ்வாறு அவர் கூறினார்.

 "எதிர்க்கட்சித் தலைவராக இருந்தால் மட்டுமே அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்துப் பேசுவார் என்றால், 2026 தேர்தலில் அந்தப் பதவியையே அவருக்கு பரிசளிக்க அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தயாராக இருக்கிறோம்" என்று தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தினர் அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.




தற்போது நடைமுறையில் உள்ள பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை நீக்கிவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமலுக்கு கொண்டுவர வேண்டும் என்று அரசு ஊழியர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். தமிழ்நாடு அரசு துறைகளில் பணிபுரியும் ஊழியர்கள் அடிக்கடி போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழ்நாட்டில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவதற்கு அதிகம் செலவாகும் என்பதால் இதில் நடைமுறைச் சிக்கல்கள் இருப்பதாக தமிழக அரசு கூறி வருகிறது.

முன்னதாக, அதிமுக ஆட்சி காலத்தில் அரசு ஊழியர்கள் போராடியபோது, அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஸ்டாலின், அரசு ஊழியர்கள் பக்கம் நின்றதோடு, நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் என உறுதி அளித்திருந்தார். மேலும், திமுகவின் தேர்தல் வாக்குறுதியிலும் அது இடம்பெற்றிருந்தது.

இந்நிலையில், ஆட்சிக்கு வந்து மூன்றரை ஆண்டுகள் கடந்தும் பழைய ஓய்வூதிய திட்டத்தை திமுக அரசு செயல்படுத்தாமல் இழுத்தடித்து வருவதால் அரசு ஊழியர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். இந்நிலையில், தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் சு.தமிழ்ச்செல்வி, பொதுச் செயலாளர் சு.ஜெயராஜராஜேஸ்வரன் ஆகியோர் இணைந்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

அதில், "கடந்த காலங்களில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராடிய இடத்திற்கெல்லாம் தேடி வந்து நாங்கள் ஆட்சிக்கு வந்தால் 'தேனாறும், பாலாறும் ஓடும்' என்றவாறு தமிழக முதல்வர் வாக்குறுதி அளித்தார். 2021-ல் சட்டமன்றத் தேர்தலின்போது புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வுதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவோம் என வாக்குறுதி அளித்தார்.

ஆட்சிக்கு வந்து மூன்றரை ஆண்டுகளாகியும் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. அதற்கு மாறாக, 24 மாதகால அகவிலைப்படி, ஊக்க ஊதிய உயர்வு, ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு, கருணை அடிப்படையிலான பணி நியமனம் ஆகியவற்றை முடக்கி, அரசு ஊழியர்களின் அனைத்து உரிமைகளையும் பறித்தது தான் அவரின் சாதனையாக உள்ளது.

தலைமைச் செயலகத்தில் நேற்று முன்தினம் நடந்த பள்ளிக் கல்வித்துறை ஆய்வுக் கூட்டத்தில் தமிழக முதல்வர் நிதிசாராத கோரிக்கைகளை மட்டுமே நிறைவேற்ற உத்தரவிட்டுள்ளதாக தெரிகிறது. பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட நிதிசார்ந்த கோரிக்கைகளை நிறைவேற்ற வாய்ப்பில்லை என்று தெரிவித்துள்ளதன் மூலம் அரசு ஊழியர்களுக்கு துரோகம் இழைத்துள்ளார்.

உண்மையிலேயே நிதி நிலை மோசமாக உள்ளது என்றால், நிதிநிலை சரியாகும் வரை எங்ளுக்கு ஊதியம் வேண்டாம் என்று தமிழக முதல்வர், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் அறிவிப்பார்களா? அரசு ஊழியர்கள், ஆசிரியர்களிடம் பிடித்தம் செய்த சிபிஎஸ் சந்தா தொகை தமிழக அரசால் தவறுதலாக கையாளப்பட்டுக் கொண்டிருக்கிறது.

போக்குவரத்துத்துறை ஊழியர்கள் தற்போது ஓய்வூதியப் பலன்கள் கிடைக்காமல் பரிதவிக்கும் நிலை அரசு ஊழியர்களுக்கும் வரப்போகிறது. எதிர்க்கட்சித் தலைவராக இருந்தால் மட்டுமே அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை தமிழக முதல்வர் சந்தித்துப் பேசுவார் என்றால், 2026 தேர்தலில் அதை அவருக்கு பரிசளிக்க தயாராக இருக்கிறோம் என்பதை சொல்ல கடமைப்பட்டுள்ளோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்து வருவதாக அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பெருமிதத்துடன் தெரிவித்தார்.


தமிழகத்தில் உள்ள அனைத்து சட்டப்பேரவை தொகுதிகளிலும் அரசுப் பள்ளிகளின் செயல்பாடுகள் மற்றும் மாணவர்களின் கற்றல் திறன் குறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவ்வப்போது திடீர் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அதன்படி, ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட பெருமூச்சு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் அவர் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.


பள்ளியில் ஒவ்வொரு வகுப்பறைக்கும் சென்று மாணவர்களிடம் அமைச்சர் அன்பில் மகேஸ் கேள்விகள் கேட்டும், மாணவர்களை புத்தகம் வாசிக்க செய்தும் அவர்களின் கற்றல் திறனை ஆய்வு செய்தார். இதனையடுத்து, மாணவர்கள் தங்களுக்குத் தெரிந்த பாடல்கள், திருக்குறள் சொல்லிக் காண்பித்து, அமைச்சரிடம் வாழ்த்துப் பெற்றனர். தொடர்ந்து, பள்ளியில் பராமரிக்கப்படும் கோப்புகள் மற்றும் பள்ளி வளாகம், கழிவறை தூய்மை ஆகியவற்றையும் அமைச்சர் அன்பில் மகேஸ் ஆய்வு செய்தார். தலைமை ஆசிரியர் எலிசபெத் மற்றும் ஆசிரியர்களுக்கும் பள்ளியை திறம்பட நடத்தி வருவதாக கூறி பாராட்டுகளை தெரிவித்தார்.


தொடர்ந்து, அமைச்சர் அன்பில் மகேஸ் செய்தியாளர்களிடம் கூறியது: ''அரசுப் பள்ளிகளில் பணியாற்றிட, அரசுத் தேர்வாணையம் மூலமாக நடத்திய தேர்வில் தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு விரைவில் பணி ஆணை வழங்கப்படும். தமிழகத்தில் அரசு தொடக்கப்பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்து வருகிறது. இதனை சமீபத்தில் மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதன் மூலமாக அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்களின் தேவை மட்டுமின்றி புதியதாக பள்ளிகளில் வகுப்பறைகள், ஆய்வகங்கள் தேவைகளும் அதிகரித்து வருகிறது.


மாநில அரசின் கல்விக் கொள்கைக்கு முரணாக மத்திய அரசு விதிகளை தெரிவித்து வருகிறது. அதன்படி, மும்மொழிக் கொள்கையை ஏற்க வேண்டும். 3, 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட விதிமுறைகளை பின்பற்றினால் தான் மத்திய அரசு மாநில அரசுக்கு நிதி ஒதுக்கீடு செய்யும் என்கிறார்கள். ஆனால், நமது முதல்வர் மாநிலத்தின் கொள்கை விட்டுக்கொடுத்து மத்திய அரசிடமிருந்து நிதியினை பெற வேண்டிய எந்த அவசியமும் இல்லை. மாநில நிதியை வைத்தே பார்த்துக் கொள்ளலாம் என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்'' என்று அவர் தெரிவித்தார்.

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

December- 7- 2024

December- 7- 2024
Award Function

Contact Us

Name

Email *

Message *

Powered by Blogger.